
வினைப்பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு
பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள்
துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள். ஆனால்
அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன. ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின்
பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக
வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள்
தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய
முறைமைகளையும் உருவாக்கினர்.

ஏகாதசி
சிவனை
வழிபடுபவர்களுக்கு பிரதோஷமும் முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களுக்கு
சஷ்டியும் விநாயகரைத் தொழுதுகொள்பவர்களுக்கு சதுர்த்தியையும் விசேஷ
தினங்களாக வகுத்தனர்.
அதேபோன்று விஷ்ணுவை வழிபட உகந்த தினம் ஏகாதசி. வளர்பிறை
தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில்
விஷ்ணுவை வழிபடத் துன்பங்கள் தீரும்.
ஒவ்வோர் ஏகாதசி திதிக்கும் ஒரு
பெயர் உண்டு. அது அந்த ஏகாதசி திதியின் தன்மையைச் சொல்லும் விதமாக
உருவாக்கப்பட்டது. இன்றைய (19.2.2020) ஏகாதசி விஜயா ஏகாதசி என்று
அழைக்கப்படுகிறது. விஜயம் என்றால் வெற்றி. கடினமான சூழலில் போராட்டமான
வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா
ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதிகம்.
பஞ்சாங்கம்
ராமச்சந்திர
மூர்த்தி மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள்
தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத்
தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று
விஜயா ஏகாதசி.
ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப்
போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார்
ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி
அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும்
தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது
புராணம்.
விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது.
உப - வாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து
இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம்
செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம்
மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள்
முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.
அதுவும்
முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது
நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில்
கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் இன்று கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை
வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன்
மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.
No comments:
Post a Comment